தற்போதைய நிலையில், பலவிதமான மாநில வாரியங்கள், ஐஐடி -கள் உள்ளிட்ட பல்வேறான கல்வி நிறுவனங்கள் ஆகியவை, வருடத்திற்கு குறைந்தபட்சம் 150 நுழைவுத் தேர்வுகளையாவது நடத்துகின்றன. ஆனால், ஐஐடி-ஜெஇஇ மற்றும் ஏஐஇஇஇ உள்ளிட்ட அதுபோன்ற ஏராளமான நுழைவுத் தேர்வுகளை ரத்துசெய்து, வரும் 2013ம் ஆண்டு முதல் மொத்தமாக ஒரே நுழைவுத் தேர்வை நடத்த, ஐஐடி இயக்குநர்கள் மற்றும் மத்திய மனிதவள அமைச்சகத்திலிருந்து வந்த அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2013ம் ஆண்டிற்கான, ஐஐடி-ஜெஇஇ தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள், அந்தாண்டில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுமுறை வேறுமாதிரியாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்த புதிய முறையின்படி, ஐஐடி-ஜெஇஇ முறையானது, திறனாய்வு தேர்வு முறையாக இருக்கும். அதன்படி, பகுப்பாய்வு, பள்ளியில் படித்த அனைத்துப் பாடங்கள் மற்றும் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியப் பாடங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்கப்படும்.
மேலும், 2013ம் ஆண்டிலிருந்து 50% முக்கியத்துவம், ப்ளஸ்2 படிப்பில் எடுத்த மதிப்பெண்களுக்கும், மீதி முக்கியத்துவம் நுழைவுத் தேர்வு செயல்பாட்டிற்கும் கொடுக்கப்படும் என்றும் ஐஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது, ஐஐடி கவுன்சில் கூட்டத்தின்போது, இறுதி ஐஐடி-ஜெஇஇ மதிப்பெண்ணை கணக்கிடுவதற்கான வெயிட்டேஜ் மதிப்பெண்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பள்ளி மேல்நிலையில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் செயல்பாட்டை கணக்கிடுவதற்கு பதிலாக, பெர்சன்டைலுக்கு வெயிட்டேஜ் கொடுக்கப்பட வேண்டும்.
ஏனெனில், ஒரு மாநில வாரியத்தில் ஒரு மாணவர் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், அது வேறொரு வாரியத்தில் வேறுபடும். எனவே, இந்தக் குறைபாட்டைப் போக்க, மாணவர்களின் பெர்சன்டேஜ், பிறவகை கூடுதல் ஒப்பீடுகளுக்குப் பயன்படுத்துவதற்காக, பெர்சன்டைலாக மாற்றப்படும்.
இதன்மூலம், வரும் 2013ம் ஆண்டில், ஐஐடி -க்கான மாணவர் தேர்வானது, 50% பெர்சன்டைல் அடிப்படையிலும், 50% ஐஐடி-ஜெஇஇ தேர்வு அடிப்படையிலும் நடைபெறும். இந்தப் பரிந்துரைகள், மனிதவள அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ராமசாமி கமிட்டியால் வழங்கப்பட்டிருந்தன. மேலும், ஜெஇஇ வாரியத்திடமிருந்து, ஐஐடி-ஜெஇஇ முறை தொடர்பான நோட்டீஸ் பெறப்படும்.
புதிய முறையில் திறனாய்வுத் தேர்வும் இடம்பெறும். இத்தேர்வில், மாணவர்கள் நிச்சயம் தேறியாக வேண்டும்.